×

மாமல்லபுரத்தில் உள்ள கோனேரி ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் கோனேரி ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேரில் ஆய்வு செய்தார். மாமல்லபுரத்தில் பொதுப்பணித்துறை தெருவையொட்டி கோனேரி ஏரி உள்ளது. 8 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் சீரழிந்து கேட்பாரற்று காணப்பட்டது. இந்த ஏரியை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு படகில் சவாரி செய்யவும், இயற்கை அழகை கண்டு ரசிக்கும் வகையில் மேம்படுத்த வேண்டுமென சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் பொதுப்பணித்துறை, தொல்லியல் துறை ஆகிய இரண்டு பகுதி எல்லைக்கு இடையில் இந்த ஏரி அமைந்துள்ளது.

மேலும், இந்த ஏரியை எந்த துறை நிர்வகிப்பது என்பது குறித்து இரண்டு துறைகளுக்கும் மத்தியில் மிகப் பெரிய குழப்பம் நீடித்து வந்தது. இதனால், ஏரியை தூர்வார எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத பொதுப்பணித்துறை அதிகாரிகள், இந்த ஏரிக்கும் எங்கள் துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கடந்த, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் அரசு முறை பயணமாக மாமல்லபுரத்தில் சந்தித்து புராதன சின்னங்களை கண்டு ரசித்தனர். அப்போது, மாமல்லபுரத்தில் அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடந்தது. இதைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று சென்னையை சேர்ந்த ஒரு தனியார் அறக்கட்டளை ஏரியில் ஒரு குறிப்பிட்ட ஆழம் தூர்வாரியது. அப்போது, பெய்த மழையில் அந்த ஏரி முழு கொள்ளளவை எட்டி ரம்மியாக காட்சி தந்தது.

தற்போது, அந்த ஏரியில் முழுவதும் செடி, கொடிகள் அடர்ந்தும் தாமரை இலைகள் முளைத்தும் போதிய பராமரிப்பு இன்றி சீரழிந்து காணப்பட்டது. இந்நிலையில், கோனேரி ஏரியில் பல்லுயிர் இனப்பெருக்கத்தை பாதுகாக்கவும், மாணவ – மாணவிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீர் மேலாண்மையின் ஒரு எடுத்துக்காட்டாக சூற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, மண்டல துணை தாசில்தார் சத்யா, காஞ்சிபுரம் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் லதா, மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் வளர்மதி எஸ்வந்த்ராவ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘கோனேரி ஏரியை சுற்றி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாதை அமைத்து பயணிகள் கண்டு களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. அங்கு விலங்குகள், பறவைகள் மற்றும் பல்வேறு உயிரினங்களை தெரிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகை அமைக்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் விளக்கிக்கூற ஏற்பாடு செய்யப்படும்’ என்றனர்.

The post மாமல்லபுரத்தில் உள்ள கோனேரி ஏரியில் சுற்றுச்சூழல் பூங்கா: அதிகாரிகளுடன் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Eco Park ,Koneri Lake ,Mamallapuram ,District Collector ,Arunraj ,Eco ,Park ,Public Works Street ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் கட்டுக்குள் வந்தது...